பரமக்குடிசித்திரைத் திருவிழா துவக்கம்: பெருமாளுக்கு காப்பு கட்டப்பட்டது!
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா நேற்று காப்பு கட்டுடன் துவங்கியது. மே 3 ல் நள்ளிரவு ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன் பெருமாள் வைகை ஆற்றில் இறங்குகிறார். பரமக்குடியில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக காலை 9.30 மணிக்கு மூலவர் பரமஸ்சுவாமி, உற்சவர் சுந்தரராஜப் பெருமாள், யாகமூர்த்தி உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் காப்பு கட்டப்பட்டது. பின்னர் தீர்த்தகுடங்கள் புறப்பாடாகி, யாகசாலையில் சேர்க்கையானது. இரவு பெருமாள் ஆடி வீதியில் வலம் வந்து, யாகசாலை முன் வேத கோஷம் முழங்க, சிறப்பு தீபாராதனை நடந்தது. மே 3 ல் காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகி, பெருமாள், கருப்பணசாமிக்கு கும்பத்திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து இரவு 2 மணிக்கு அநேக தீவெட்டிகள் வெளிச்சத்தில், வான வேடிக்கைகளுடன், பெருமாள் ‘கள்ளழகர்’ திருக்கோலத்துடன், பூப்பல்லக்கில் அலங்காரமாகி வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். மறுநாள் தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, அநேக பக்தர்களால் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து மே 5 ல் இரவு மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளித்து தசாவாதாரமும், மறுநாள் கருடசேவையும், மே 8 ல் மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் திருக்கோயிலை அடைவார். ஏற்பாடுகளை
தேவஸ்தான டிரஸ்டிகள் அகஸ்தியன், மாதவன், நாகநாதன், கெங்காதரன், கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.