உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் அக்னி நட்சத்திர சித்திரைக் கழுவு விழா!

பழநியில் அக்னி நட்சத்திர சித்திரைக் கழுவு விழா!

பழநி: பழநியில் அக்னி நட்சத்திர விழா "சித்திரை கழுவு டன் நாளை நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் மாட்டுவண்டிகளில் வந்து மலைக்கோயிலில் குவிந்துள்ளனர்.அக்னி நட்சத்திர காலகட்டமான சித்திரையின் பின் 7 நாட்கள், வைகாசியில் முன் 7 நாட்களை "சித்திரைக் கழுவு என அழைக்கின்றனர். இந்த நாட்களில் பழநிமலைக்கோயில் கிரிவீதியை வலம் வருவது சிறப்பு. கிரிவலப் பாதையிலுள்ள கடம்ப மரத்திலிருந்து வீசும் சஞ்சீவி மூலிகை காற்று சகல நோய்களை, தீர்க்க வல்லது என்ற ஐதீகம் உள்ளது.

இதனால் கிரிவீதியில் உள்ள கடம்ப மரத்தில் பூத்துக் குலுங்கும் பூவையும், இலைகளையும், பெண்கள் தங்களது தலையில் சூடிக் கொண்டும் மலையை கிரிவலம் வருகின்றனர். நாளைய சித்திரைக் கழுவு நிறைவு விழாவை முன்னிட்டு உடுமலை, திருப்பூர், சேலம், ஈரோடு, பொள்ளாச்சி, கோவை, பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதல் மாட்டு வண்டிகளில் வந்து குவிந்துள்ளனர். அவர்கள் தீர்த்தக்காவடி, மயில்காவடிகள் எடுத்து ஆட்ட பாட்டத்துடன் கிரிவீதியை வலம் வந்து நாளை அதிகாலை 3 மணி முதல் மலையை கிரிவலம் வருவர். காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்கின்றனர். மாலை 5 மணிக்கு மேல் ஒருதரப்பினர் மலையை கிரிவலம் வந்து மலைக்கோயிலில் ராஜஅலங்காரத்தில் ஞான தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்கின்றனர். உடுமலை பக்தர் கந்தர்மணி கூறுகையில்,"" சித்திரைக் கழுவு விழாவிற்கு 20 ஆண்டுகளாக வருகிறோம். ஊர்மக்கள் ஒன்றாக இணைந்து மாட்டுவண்டியில் வந்து மலையை கிரிவலம் வந்து பின் அதிகாலை முருகனை தரிசனம் செய்வது வழக்கம்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !