வைதேகி- பெயர்க்காரணம்!
ADDED :3947 days ago
சீதைக்கு ‘வைதேகி’ என்று பெயர் உண்டு. விதேகநாட்டில் பிறந்தவள் என்பதால் இந்தப் பெயர் வந்ததாகச் சொல்வர். விதேக நாட்டை ஆட்சி செய்தவர் ஜனகர். இவர் ஒரு ராஜரிஷி. பதவியில் இருந்தாலும் அதிகாரம், செல்வத்தின் மீது பற்றில்லாமல் இருந்தார். ‘விதேகம்’ என்ற சொல்லுக்கு ‘உடல் மீதான ஆசையை விடுத்தல்’ என்ற பொருளும் உண்டு. இதன் அடிப்படையில் வைதேகி என்ற சொல்லுக்கு ‘உடலைத் துறந்தவள்’ என்று பொருள் கொள்ளலாம். உடலை உண்மையெனக் கருதி, அதற்கு நகையணிந்து, வாசனைத் திரவியம் பூசும் வழக்கம் இன்று வரை நம்மிடம் விடவில்லை. ஆனால், ராணியாய் பிறந்தாலும், ராஜாவுக்கு வாழ்க்கைப்பட்டாலும், எல்லா இன்பங்களையும் துறந்து காட்டில் வசித்தாள் சீதை. இந்த காரணத்தாலும் இவள் வைதேகியானாள்.