மண்டுகாளியம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்!
பழநி: கே.வேலுார், மண்டுகாளியம்மன் கோவில் திருவிழாவில், வெளிமாநிலம், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த, 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரப்பட்டி அருகேயுள்ள, கே.வேலுார் மண்டுகாளியம்மன் கோவிலில், கடந்த மூன்று நாட்களாக, ஆண்டு திருவிழா நடந்தது. பக்தர்கள், சண்முக நதியிலிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்தும், அலகு குத்தியும், தீச்சட்டிகள் எடுத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர். நேற்று காலை, கேரளா, மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாவட்டம் மற்றும் நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி, காவலப்பட்டியைச் சேர்ந்த, 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், குழந்தைகளுடனும், கரும்புத் தொட்டில் எடுத்தும், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் தீ மிதித்தும் (பூக்குழி இறங்குதல்) நேர்த்திக்கடன் செலுத்தினர்.