ரமலான் சிந்தனைகள்: கூலி பெற தயாராவோம்!
“நோன்பு பொறுமையில் பாதி, பொறுமை இறை நம்பிக்கையில் பாதி,” என்கிறார் அண்ணல் நபிகள் நாயகம் இஸ்லாமின் பல துாண்களில் நோன்பு தனித்துவம் பெறுகிறது. ஏனெனில், நோன்புக்கும் இறைவனுக்கும் தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது. இதை நபிகள் நாயகம் மூலமாக இறைவனே கூறுகிறான்.“நோன்பைத் தவிர்த்து மற்ற நற்செயல்கள் ஒவ்வொன்றும் பத்திலிருந்து எழுபது மடங்கு கூலி பெறும். ஆனால், நோன்பு எனக்காக நோற்கப்படுகிறது. அதற்குக் கூலி நானே கொடுப்பேன்,” என்கிறான். மேலும்,“நோன்பாளி எனக்காக உண்பதையும், பருகுவதையும் விலக்குகிறான். உணவாசையை அடக்குகிறான். எனவே நானே அவனுக்கு கூலி கொடுப்பேன்,” என்கிறான். மற்ற நற்செயல்களுக்கு அளவீடு இருக்கிறது. இறைவனே கூலி தருகிறான் என்றால், அதன் அளவை எதைக்கொண்டு மதிப்பிட முடியும்! எனவே, இறைவனின் கட்டளையை ஏற்று நற்சிந்தனைகளுடன் நோன்பிருப்பவர் அடையும் பலனுக்கு அளவுகோலே இல்லை. நாம் நமக்குரிய கூலியை இறைவனிடமிருந்து பெற தயாராவோம்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50 மணி.
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.20 மணி.