உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திங்கள் துதி!

திங்கள் துதி!

சித்திரை

அத்தனுடன் வீற்றிருக்கும் அங்காளி வாசல் தள
கர்த்தன்என வீற்றிருக்கும் காயாம்பூ மேகவண்ணா!
நித்தம்நித்தம் உன்பாதம் நீணிலத்தோர் கொண்டாடச்
சித்திரையில் வருவாயே தீரா கறுப்பையா!

வைகாசி

செய்ய கடல்சூழ்ந்த தேசம் செழித்தோங்கப்
பொய்யாது பூக்கும் புளியமரச் சோலையிலே
வெய்யோனே சாட்சியாய் வீற்றிருக்கும் பெருமானே
வைகாசி வருவாயே வள்ளல், கறுப்பையா!

ஆனி

கூனியால் கைகேயி கொண்ட வரத்தாலே
கானிலே போய் இலங்கைக் கட்டழித்து வென்றவனே
கோனோடு தேவர் குடிகாத்த மாயவனே
ஆனியிலே வருவாயே ஐயா கறுப்பையா!

ஆடி

சாடியிலே வெண்ணெய் தயிருண்டு இடைப்பெண்கள்
கூடிச் சபாஷ் என்று கொஞ்சி விளையாட
வேடிக்கை யாக விளாவெறிந்த கோபாலா!
ஆடியிலே வருவாயே அப்பா, கறுப்பையா!

ஆவணி

ஏவலால் மேகம் எழுகடலின் நீரை அள்ளித்
தாவிப் பொழியத் தரணிமிகத் தத்தளிக்க
கோவினத்தைக் காப்பாற்றக் குன்றம் எடுத்தவனே!
ஆவணியில் வருவாயே அரசே கறுப்பையா!

புரட்டாசி

பேசுகின்ற சூது பெருத்ததுரி யோதனனை
மாசில்லாப் பஞ்சவரால் வாட்டி வதைத்தோனே!
நேசமுடன் என்பக்கம் நீதான் உவந்து
புரட்டாசியில் வருவாயே புண்ய கறுப்பையா!

ஐப்பசி

செப்பெரிய பீமன் சினந்து துரியனுடன்
தப்பாது மல்யுத்தம் தான் செய்யும் வேளையிலே
துப்பாக முன்வந்து தொடைதட்டும் மாதவனே!
ஐப்பசியில் வருவாயே ஆனந்தக் கறுப்பையா!

கார்த்திகை

தகை அடக்கிப் பேய்ச்சிமுலை தானுண்ட மன்னவனே!
சிகை அடக்கிக் கம்சன் திமிரடக்கி வென்றவனே!
பகைஅடக்கி வெற்றி படைக்க வருவாய் - பூ
முகை அடக்கும் வாசமுள்ள முத்தே கறுப்பையா!

மார்கழி

வீறுகொண்ட பாதகரை வெய்ய வடிவாளால்
கூறுகொண்டு காக்கை கொறிக்கத் தருபவனே!
மாறுகொண்ட என்பகையை வாட்டி எனைக்காக்க
வாரும்ஐயா மார்கழியில்; வாரும் கறுப்பையா!

தை

கைவாளும் செங்கமலக் கண்ணும் கருநீல
மெய்யும் நறும்புனுகு வீசும் திருமார்பும்
செய்யபதுமமலர்ச் சேவடியும் தோன்ற என்பால்
தையில் வருவாயே தங்கக்கறுப்பையா

மாசி

வீசுபுகழ் அனுமன், வீரபத்திரன் இருளன்
பேசு வயிரவனும் பேய்ச்சிராக் காச்சியுடன்
தேசுள்ள முன்னோடிநீ தேவதையும் சூழ்ந்துவர
மாசியிலே வருவாயே மன்னா கறுப்பையா!

பங்குனி

புரியாஇழி சொல்லாய்ப் புன்சொல்லாய் நின்றாலும்
பெருமையுடன் உன்புகழே பேசவந்த சொல்அதனால்
அருமையென நாவலரும் அடியேன் கவிஏற்க
வருவாயே பங்குனியில் வள்ளல் கறுப்பையா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !