ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா ஐந்து கருட சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் மண்டபங்களுக்கு எழுந்தருள்கின்றனர். விழாவின் ஐந்தாம் நாளான நேற்று ஐந்து கருடசேவை நடந்தது. காலை 10 மணிக்கு பெரியாழ்வார் ஆடிப்பூர பந்தலுக்கு எழுந்தருள அங்கு சுந்தரராஜபெருமாள், ஸ்ரீனிவாசபெருமாள், திருத்தங்கால் அப்பன், ஆண்டாள்-ரெங்கமன்னார் ஆகியோருக்கு மங்களாசாசனம் நடந்தது. விஜயபாஸ்கர் பட்டர், அனந்தராமகிருஷ்ணன் பட்டர், ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் பட்டர்கள் பங்கேற்றனர். மாலையில் அனைத்து பெருமாள்களுக்கும் நவகலச திருமஞ்சனம் நடந்தது. இரவு 10 மணிக்கு ஐந்துகருட சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வாணவேடிக்கைகளும், நாம சங்கீர்த்தன பஜனைகளும் நடந்தன. இதனால் ஆண்டாள் கோயில் விழாக்கோலம் பூண்டிருந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.