நாமக்கல் ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல்: தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். நாமக்கல்-பரமத்தி சாலை, தொட்டிப்பட்டியில் சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மிகுந்த பொருட்செலவில் கோவில் திருப்பணி துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கரூர் சின்மயா மிஷன் ஆச்சார்யா அநுத்தமாநந்தா ஸ்வாமிகள், நாமக்கல் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் தலைவர் பூரணசேவாநந்த மஹராஜ் ஸ்வாமி ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, குரு பிரார்த்தனை, கணபதி பூஜை, மகா யாகம், அக்னி உருவெடுத்தல், புண்யாகம், மூர்த்தம் ஆவாகணம், ஜபம், பூர்ணாஹூதி ஹோமம், நித்ய ஆராதனை நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, இரண்டாம் கால பூஜை நடந்தது. மேலும், நித்திய ஹோமம், மகா சாந்தி ஹோமம், நித்ய ஆராதனையும், மகா சாந்தி அபிஷேகம், விமான நேத்திரம் திறத்தல், மூர்த்தம் நேத்ரம் திறத்தல், தீபாராதனையும் நடந்தது. நேற்று, அதிகாலை, 5.45 மணிக்கு, ஐந்தாம் கால பூஜையும், கும்பம் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது. அதையடுத்து, காலை, 9 மணிக்கு, கற்பக விநாயகர், யோக ஆஞ்சநேயர் மற்றும் சர்வசித்தி சாயி ஸ்வாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர், ஷீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.