மெலட்டூரில் சித்தி புத்தி தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாணம்!
தஞ்சை: மெலட்டூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீசித்தி புத்தி ஸமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகருக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தஞ்சையை அடுத்துள்ள மெலட்டூர் கிராமத்தில் ஸ்ரீசித்தி புத்தி ஸமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவ விழா நடைபெறும் 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் 7ம்நாள் அன்று திருக்கல்யாணம் நடைபெறும். அதைப்போல் இந்தாண்டு இவ்விழா கடந்த 7ம் தேதி தொடங்கி தினமும் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்று விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலவகையான சீர்வரிசைகளை கொண்டுவந்தனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதியதாக பட்டு வேட்டி, பட்டு சேலை அணிவித்து ஸ்ரீ சித்தி புத்தி சமேத தட்சிணாமூர்த்திக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. விநாயகருக்கு திருக்கல்யாணம் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. அதில் மெலட்டூரில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வு மிகவும் விசேசம். ஏனென்றால் ஸ்ரீ ஞான புராணத்தில் ஸ்ரீ கற்க மகரிஷியால் வர்ணிக்கப்பட்டிருக்கின்ற 108 கணபதி ஸ்தலங்களில் 81 வது ஸ்தலமாக ஸ்ரீசித்தி புத்தி ஸமேத அருள்மிகு தட்சிணாமூர்த்தி விநாயகர் உள்ளது. இத்திருக்கல்யாண வைபோகத்தில் கலந்து கொண்டால் திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். கல்வி வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த திருமண நிகழ்ச்சியில் தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.