குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் கற்பக விநாயகர் சன்னதியில், உற்சவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் வைக்கப்பட்டு பூஜை நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் லட்சார்ச்சனை, யாகசாலை பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டு, உற்சவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலித்தார்.பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவிநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் மருதுபாண்டியர் தெருவில் எழுந்தருளியுள்ள ஆனந்த விநாயகருக்கு ராஜ அலங்காரமாகி பூஜை நடந்தது.
சோழவந்தான்: சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி சிவன் கோயிலில், 18 அடி உயர விநாயகருக்கு எம்.வி.எம்., குழுமம் சார்பில் அபிஷேக, தீபாராதனை நடந்தது. கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் மருதுபாண்டியன் அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை கமிட்டி பொறுப்பாளர்கள் முருகேசன், கணேசன் செய்திருந்தனர். சோழவந்தான் தென்கரை அகிலாண்டேஸ்வரியம்மன் கோயிலில் அமைந்த கோட்டைவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நடந்தது.