உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா

கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா

கம்பம்: கம்பம் வேலப்பர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்தது. தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை முதல் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து, அரோகரா கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். பின்னர், முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதேபோல் கம்பராயப் பெருமாள் கோயிலில் நடந்த சஷ்டி விழாவிலும், முருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் நடந்த சூரசம்ஹார விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மாலை திருக்கல்யாண விழாவும், கல்யாண விருந்தும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர். கூடலூர் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் நடந்த கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுந்தரவேலவருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து துர்க்கையம்மனுக்கு சக்தி அபிஷேகம் நடந்தது. மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலையில் சுந்தரவேலவருக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், மகளிர் குழுவினரின் தெய்வீகக் கூட்டு வழிபாடு பிரார்த்னையும், மாலையில் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !