குலதெய்வம் கோவில்களுக்கு படையெடுப்பு பக்தர்கள் வரத்து குறைவால் மேட்டூர் வெறிச்
மேட்டூர்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் குலதெய்வம் கோவிலுக்கு படையெடுத்ததால், மேட்டூர் காவிரி கரையோர பகுதிகள் நேற்று வெறிச்சோடியது. மாதம்தோறும் சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டத்தில் இருந்து அமாவாசை நாளில் மாதேஸ்வரன் மலை கோயிலுக்கு பல ஆயிரம் பக்தர்கள் செல்வார்கள். இவர்களில் பெரும்பாலோர் மேட்டூரில் இறங்கி காவிரியில் புனித நீராடி விட்டு மாதேஸ்வரன்க்கு புறப்பட்டு செல்வது வழக்கம். அதனால், அமாவாசை நாட்களில் காவிரி கரையோரத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.நேற்று முன்தினம் ஆடி அமாவாசை என்பதால் குலதெய்வங்களை வழிபாடு செய்வதற்காக பல்வேறு கோயில்களுக்கு சென்று விட்டனர். மேட்டூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான பக்தர்கள் அணையின் மறுகரையில் உள்ள முத்தையன் கோயிலுக்கு சென்று விட்டனர்.மேட்டூர் வரும் பெரும்பாலான பக்தர்கள் முனியப்பனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு, சமைத்து சாப்பிடுவது வழக்கம். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபாடு செய்ய வேண்டியிருப்பதால் பெரும்பாலான பக்தர்கள் அசைவம் சாப்பிடுவதில்லை. அதனால், வழக்கமான அமாவாசை நாட்களை விட நேற்று முன்தினம் மேட்டூருக்கு குறைவான பக்தர்களே வந்ததால் காவிரி கரையோர பகுதிகளில் வெறிச்சோடியது.