விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்!
விருத்தாசலம்: கார்த்திகை தீபத்தையொட்டி, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:45 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
நேற்று காலை 11:00 மணிக்கு பெரியநாயகர் சன்னதியில் பஞ்சமூர்த்திகளுக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, அரிசி பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, சந்தனம், பன்னீர், கலச அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு கோவில் வளாகத்தில் உள்ள அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகம், 6:00 மணிக்கு தீபம் ஏற்றும் ஐதீக நிகழ்ச்சியும், தொடர்ந்து தேரடியில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஐந்து சொக்கப்பனைகள் ஏற்றும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.அதேபோல், மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் சித்தி விநாயகர், சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு வெள்ளிக் கவசத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.