காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் பெருமாளை வழிப்பட்டனர்.
காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் கடந்த 11ம் தேதி முதல் மார்கழி மாத பகல்பத்து இராப்பத்து உற்சவம் துவங்கியது. பகல்பத்து உற்வசத்தில் தினந்தோறும் நித்ய கல்யாண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாரதனை நடக்கும். தினந்தோறும் மாலை பிரபந்த சேவையும், மாடவீதி சாமி புறப்பாடும் நடந்தது. பகல்பத்து உற்சவம் நேற்று முடிந்தது. பகல்பத்து உற்சவத்தின் இறுதி நாளான அன்று பெருமாள் மோகன அவதாரத்தில் அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசி என்பதால், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதிகாலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை முடிந்து காலை 5.30 மணிக்கு கோவிலின் பரமபத வாசல் வழியாக அம்பாளுடன் நித்ய கல்யாண பெருமாள் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு பெருமாளை வழிப்பட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,தனி அதிகாரி ஆசைத்தம்பி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.