உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சென்னிமலை முருகன் கோவில் மகா தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தரிசனம் நேற்றிரவு நடந்தது. இதை லட்சக்கணக்கான பக்தர்கள் நேரில் தரிசனம் செய்தனர். சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா, கடந்த, 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் பல்லக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகனகாட்சி, பஞ்சமூர்த்தி புறப்பாடு, திருத் தேரோட்டம், குதிரை வாகன காட்சி, தெப்போற்சவம் என தொடர்ந்து விழா நடந்தது. விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகா தரிசனம், நேற்றிரவு வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக காலை, 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்து குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம், மலர் அபிஷேகம் நடந்தது. இதற்கு டன் கணக்கில் பூக்கள் பயன்படுத்தப்பட்டன. இரவு, 8 மணி அளவில் நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். இரவு, 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜ வீதிகளிலும் சுவாமிகள் ஊர்வலம் சென்றன. விடிய விடிய ஊர்வலம் நடந்தது. அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் சென்றடைந்தது. இன்று மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், திருவிழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !