உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை திருமூர்த்திமலை கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உடுமலை திருமூர்த்திமலை கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், பக்தர்களின் பலத்த கரகோஷத்துடன் வெகு விமரிசையாக நடந்தது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அமணலிங்கேஸ்வரர் கோவில். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளும் ஒன்றாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். பிப்.,26 அதிகாலை, 4:00 மணிக்கு நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை யாத்ரா தானத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. காலை, 6:15 மணிக்கு கோவிலில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, 7:00 மணிக்கு விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

கோவை, திருப்பூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. மதியம், 12:00 மணி வரை சிறப்பு பூஜைகளும், மகா அபிேஷக, ஆராதனையும், சிறப்பு வழிபாடும் நடந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த, படகு இல்லம் பகுதியில் வண்டிகள் நிறுத்தப்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல வலியுறுத்தப்பட்டது. இதனால், கோவில் பகுதியில் வாகன நெரிசல் இன்றி பக்தர்கள் நடந்து சென்றனர்.

அரசு போக்குவரத்துக்கழகம் உடுமலை கிளை சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக அதிகாலையில் இருந்தே பஸ் இயக்கம் தொடங்கியது. கும்பாேஷகத்தில், கலெக்டர் ஜெயந்தி, வனத்துறை அமைச்சர் ஆனந்தன், நகராட்சி நிர்வாகங்கள் துறை அமைச்சர் வேலுமணி, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சண்முகவேலு, அரசு கேபிள் வாரிய தலைவர் ராதா கிருஷ்ணன் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, பிப்.,26 முன்தினம் இரவு ஜல்லிபட்டி உட்பட சுற்றுப்பகுதி கிராம மக்கள் சார்பில், தேவராட்டம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வனப்பகுதியிலுள்ள மாமங்கத்தம்மன் கோவிலில், இருந்த தீர்த் தம் எடுத்து வரப்பட்டு, சலகெருது மேல் வைத்து வலம் வரப்பட்டது. தளி பாளையக்காரர் எத்தலப்பனின் முக்கிய வழிபாட்டு தலமாக இருந்த இங்கு அப்பாரம்பரியம் தொடர இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !