வீரநாராயண பெருமாள் கோவில் தேரோட்டம் திடீர் நிறுத்தம்
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், தேரோட்டம் திடீரென நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், கடந்த மாதம் 23ம் தேதி, பந்தல்கால் முகூர்த்தத்துடன் துவங்கியது. தொடர்ந்து 7ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து, தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று (22ம் தேதி) நடப்பதாக இருந்தது. இதற்காக நேற்று காலை நிலைக்காலில் தேர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. தேரோட்டத்தைக் காண அப்பகுதி மக்கள் குவிந்தனர். இந்நிலையில், தேர் வரும் வீதியில் துக்க நிகழ்வு நடந்து விட்டதாகவும், தேர் புறப்பாடு மாலையில் நடக்கும் என, கோவில் நிர்வாகிகள், பக்தர்களுக்கு தெரிவித்தனர். அதேபோன்று அனைத்து பூஜைகளும் முடிந்த நிலையில், மாலை 4:30 மணிக்கு, தேர் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில், கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தேர் புறப்பாடு இல்லை என, தெரிவித்தார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வீரநாராயண பெருமாள் கோவிலில் இதுவரை தேரோட்டம் நின்றதில்லை என, பக்தர்கள் ஏமாற்றத்துன் திரும்பினர்.