ஏப்.24: புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம்
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா ஸித்தி தினம் ஏப்.24. பக்தர்களுக்கு அவரது அறிவுரைகள் ..
*மனிதர்களுக்கு பதினாறில் இருந்து முப்பது வயது வரையில் உள்ள காலகட்டம் மிகவும் முக்கியமானது. இந்த வயதில் கடுமையாக உழைத்துப்போராடி, லட்சியத்தை அடைய வேண்டும்.
*நாடு, மொழி, இனம், பொருளாதார நிலை இவற்றிற்கு தீங்கு நேரும் வகையில், எந்த சூழ்நிலையிலும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடாதீர்கள்.
*அறிவின் உச்சகட்டமே அன்பு; கல்வியின் உச்சநிலை நல்ல குணாதிசயம் ஆகும்
*மாணவர்களுக்கு நல்ல குணங்களைக் கற்றுத்தருவதும், தகுதியானவராக மாற்றித் தருவதுமே கல்வி கற்பித்தலின் அடிப்படை ஆகும்
*மனிதர்கள், பக்தியின் ஒரு அங்கமாகத்தான் இருக்க வேண்டும். எந்த செயலையும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுத்த வேண்டும்.
*உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து, பொழுது போக்குகளில் காலத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. அதைக் கொண்டு பிறருக்கு சேவை செய்யுங்கள்.
*கடவுளே இந்த வாழ்க்கையைக் கொடுத்தவர். அவரே வாழ்க்கையின் பாதுகாவலராகவும், லட்சியமாகவும் இருக்கிறார்
*உங்களது செயல்பாடுகள், பக்திப்பூர்வமானதாகவும், பழத்தின் உள்ளிருக்கும் சதையை எடுத்து சாப்பிடுவதைப் போல பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்
*‘நான் பயமில்லாதவன்’, ‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொண்டே இருங்கள். நிச்சயம் நீங்கள் யாராலும் வெல்ல முடியாதவராக வலிமை பெறுவீர்கள்
*குழந்தைகள் தவறு செய்யும்போது மிகவும் கண்டிப்பு காட்டுங்கள். அவர்கள் நற்செயல் செய்யும்போது, வாய்விட்டு புகழ்ந்து பேசுங்கள். அதுவே அவர்கள் எதிர்காலத்தில் நல்ல பாதையில் செல்லும் வழிகாட்டியாக அமையும்
*லட்சியத்தை அடையும் வரையில் துவண்டு போவதும், அதிலிருந்து பின் வாங்குதலும் கூடாது.
*விண்வெளிக்குச் சென்று நிலவிலும் கால் வைத்து விட்டவர்களுக்கு, பக்கத்து வீட்டினருடன் இணக்கமாக இருக்கத் தெரிவதில்லை. அயல்வீட்டாருடன் ஒற்றுமையாய் இருங்கள்.
*கடவுளை அடைவதையே, உங்களது லட்சியமாகக் கொண்டு வாழுங்கள். அவருக்கு வெளியில் விளக்கேற்றி வழிபடுவதை விட, மனதிற்குள் விளக்கேற்றி வழிபடுவதுதான் சிறந்தது.
*உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வரைமுறை வைத்துக்கொள்வது தவறான செயல். இவ்வாறு செய்வது தன் சொந்த பெற்றோரையே அவமரியாதை செய்ததற்குச் சமம்.
*சாப்பிடும் உணவானது, அதற்கான வகைகளை வாங்கியவர், சமைத்தவர் மற்றும் பரிமாறியவர் ஆகியோரின் மனநிலையைப் பொறுத்தே இருக்கும்
*பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், உணவிற்காக தரையிறங்கத்தான் வேண்டும். நீங்களும் எவ்வளவு உயர்ந்தாலும் பணிவுடன் இருங்கள்.
*உணர்வுகளை கட்டுப்படுத்தி செயல்பட்டால் மட்டுமே, மனிதன் மேன்மையான நிலை பெற முடியும்.