சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மங்கலம்பேட்டை: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. தினசரி காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. கடந்த ௧௩ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 9:30 மணிக்கு அரவாண் களபலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 5:00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து ஏராளமானோர் சாட்டை அடி வாங்கி, அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். மாலை 6:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து 15ம் தேதி காலை 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.