உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்!

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்!

மதுரை : மதுரை அருகிலுள்ள புண்ணியத்தலம், சோழவந்தான். பூஜை மற்றும் மங்கள நிகழ்ச்சிகளில் வெற்றிலை இல்லாமல் இருக்காது. ராமனின் வெற்றிச் செய்தியை அறிவித்தவுடன், சீதாபிராட்டி, அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து, பாராட்டினாள் என்ற செவி வழி செய்தியுண்டு. அத்தகைய சிறப்புமிக்க வெற்றிலை, அதிகமாக விளையும் சோழவந்தானில் கோவில் கொண்டுள்ளாள், ஜெனகை மாரியம்மன். ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் பிறந்தவர், பரசுராமர். தன் கணவர் செய்யும் பூஜைக்காக, தினமும் நதிக்கு சென்று, ஆற்று மணலை எடுத்து பானையாக்கி, அதில் நீர் எடுத்து வருவாள் ரேணுகாதேவி. கணவருக்கு செய்த சேவை காரணமாக, இந்த வல்லமை அவளுக்குள் ஏற்பட்டிருந்தது.

இத்தகைய பதிவிரதையான அவள், ஒருசமயம் ஆற்றில் நீர் முகர்ந்த போது, வான்வெளியில் சென்ற கந்தர்வன் ஒருவனின் நிழலை, ஆற்று நீரில் பார்த்து, இப்படிக் கூட ஒரு அழகன் இருப்பானா... என்று, மனதில் நினைத்தாள். அந்த நிமிடமே, அவளது பதிவிரதா சக்தி நீங்கி விட்டது. இதனால், மணலில் குடம் செய்யும் வல்லமையை இழந்தாள், ரேணுகாதேவி. இதையறிந்த முனிவர், பரசுராமனை அழைத்து, தாயின் தலையை வெட்டச் சொன்னார்; பரசுராமரும் அவ்வாறே செய்தார். அன்னையைக் கொன்ற பாவம் தீர, தந்தையிடம், தன் தாயை உயிர்ப்பித்து தரும்படி வரம் கேட்டார், பரசுராமர். முனிவரும், கமண்டல நீரை மந்திரம் ஓதி தந்து, இதை உன் தாயின் தலையில் தெளித்தால் தலை தானாக ஒட்டி, உயிர் வரும்... என்றார். ஆனால், தாயின் தலை மட்டுமே கிடந்தது; உடலைக் காணவில்லை. எனவே, வேறொரு பெண்ணின் உடம்போடு அதை ஒட்ட நேர்ந்தது. உயிர் பெற்று எழுந்த அப்பெண்னை மழை தரும் தெய்வமாக மாறும்படி, அருள்பாலித்தார், ஜமதக்னி முனிவர். அவளும் மாரியாக, உருவெடுத்து, பல இடங்களில் தங்கினாள். அவள் தங்கிய இடங்களில், சோழவந்தானும் ஒன்று!

இந்த மாரியை, ஜனகமகாராஜா வணங்கியதாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவள், ஜனகை மாரி எனப்பட்டு, ஜெனகை மாரி என்ற பெயர் மாற்றம் பெற்றாள். அம்மனுக்கு பின்புறம் ஆக்ரோஷ நிலையில் காட்சி தருகிறாள், ரேணுகாதேவி. இவளை, சந்தனமாரி என்கின்றனர். அம்மை கண்டவர்கள் இத்தலத்தில் உள்ள கிணற்றில் குளித்து, அம்மனுக்கு அர்ச்சனை செய்து, நோய் நீங்க வேண்டிக் கொள்கின்றனர். மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த தீர்த்தமும் தரப்படுகிறது. சோழவந்தானை சுற்றியுள்ள, 48 கிராம மக்களின் இஷ்ட தெய்வம், ஜெனகை மாரியம்மன். வைகை நதி கரையில் உள்ள சோழவந்தானுக்கு சதுர்வேதிபுரம், அனந்த சாகரம் மற்றும் ஜனகையம்பதி போன்ற புராணப் பெயர்களும் உண்டு. இக்கோவிலில், வைகாசி திருவிழா, 17 நாட்கள் நடக்கும். மாரியின் மகத்துவமான அருளைப் பெற, சோழவந்தான் சென்று வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !