உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை விழா

திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த ஆவணி மாத கிருத்திகை விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை, ஆவணி மாத கிருத்திகை என்பதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவடிகளுடன் மலைக்கோவிலுக்கு வந்தனர். சில பக்தர்கள் மொட்டை அடித்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். ஆவணி மாத கிருத்திகை விழாவையொட்டி, தமிழகம், ஆந்திராவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்திருந்து, மூலவரை தரிசிக்க, பொது வழியில் மூன்று மணி நேரம், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கிரீடம், தங்க வேல் மற்றும் வைர ஆபரணங்கள் அலங்காரத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகன் பெருமானுக்கு பால், பன்னீர், விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 7:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !