பூசாரிகளுக்கு ஆலய வழிபாட்டு பயிற்சி
சூலுார்: தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் சார்பில், பூசாரிகளுக்கான ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் சூலுார் அடுத்த அரசூர் தங்கநாயகி அம்மன் கோவிலில் துவங்கியது. மாநில தலைவர் வாசு தலைமை வகித்து பேசுகையில்,“கோவில் பூசாரிகள் ஆன்மிக வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போன்றவர்கள். சமுதாயத்தில் ஆன்மிக, கலாசார நெறிகளை பரப்புவதில் முக்கியமானவர்கள்,” என்றார். ஆலய வழிபாட்டு முறைகள் குறித்து வெங்கடேஸ்வர சுவாமிகள் பேசுகையில்,“ஒவ்வொரு தெய்வங்களுக்கும் உரித்தான மூல மந்திரங்கள், அஷ்டோத்திரங்களை அனைவரும் அறிந்திருந்தால், வழிபாடு முழுமையடையும். அபிஷேக, ஆராதனைகள் குறித்து முறையான பயிற்சி பெற்றிருந்தால் ஆன்ம பலம் பெருகும்,” என்றார். வரும், 29ல் நடக்கும் கோவை மாவட்ட மாநாட்டில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். முகாமில், 70க்கும் மேற்பட்ட பூசாரிகள் பங்கேற்றுள்ளனர்.