ஏழு அர்ச்சகர்கள் நடத்தும் பூஜை!
ADDED :3465 days ago
அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களும் சப்தரிஷிகள் எனப்படுவர். வான மண்டலத்தில் சனி கிரகத்திற்கு அப்பால் உள்ள சப்தரிஷி மண்டலத்தில் வாழும் இவர்கள், தினமும் மாலையில் விஸ்வநாதரைத் தரிசிக்க காசிக்கு வருவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் தினமும் இரவு 7:00 மணி முதல் 8:30 வரை சப்தரிஷி பூஜை நடக்கிறது. ஏழு பண்டாக்கள் (அர்ச்சகர்கள்) விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து பூஜையை நடத்துவர். ராம நாமம் எழுதிய வில்வ இலைகளால் அர்ச்சித்த படியே சிவனுக்குரிய மந்திரம், ஸ்தோத்திரங்களை ஏற்ற இறக்கத்துடன் ராகமாகப் பாடுவர். பண்டாக்கள் கோரஸாக மந்திரம் ஜெபிப்பதைக் கேட்கும் போது பக்தர்கள் பரவசத்தில் ஆழ்ந்து விடுவர்.