சென்னையின் இரு அஞ்சலகங்களில் திருப்பதி தரிசன டிக்கெட் பெறலாம்!
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னை மயிலாப்பூர் மற்றும் தி.நகர் தலைமை அஞ்சலகங்களில், சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர்கள், நேற்று முதல் செயல்பட துவங்கின. தமிழக அஞ்சல் துறை சார்பில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், 300 ரூபாய் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டுகளை, சென்னையில் உள்ள, மயிலாப்பூர் மற்றும் தி.நகர் தலைமை அஞ்சலகங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் சேவை, நேற்று முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தி.நகர் அஞ்சலகத்தில் நடந்த விழாவில், டிக்கெட் விற்பனையை, சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் ரங்கநாதன் துவங்கி வைத்தார். அஞ்சல் துறை மூலம், 56 நாட்களுக்கு முன்னதாக பதிவு செய்யலாம். பக்தர்கள் காலை, 10:00, 11:00, மதியம், 12:00 மணி மற்றும் பிற்பகல், 1:00 மணி ஆகிய நான்கு தரிசன நேரங்களில், டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்ள முடியும். ஒரு டிக்கெட்டில் அதிகபட்சமாக, ஆறு நபர்கள் பதிவு செய்யலாம். பயணிகள் குழுவைச் சேர்ந்த ஒருவர், நேரில் வந்து இந்த நுழைவுச் சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். புகைப்படங்களை தரவேற்றம் செய்து, அவர்களுக்கு, ‘பார்கோடு’ பதியப்பட்ட நுழைவுச் சீட்டு வழங்கப்படும். இந்த சிறப்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் ஒரு பக்தருக்கு, இரண்டு லட்டுகள் வழங்கப்படும். கூடுதலாக, 25 ரூபாய் செலுத்தி, கூடுதலாக ஒரு லட்டு பெற்றுக்கொள்ளலாம்.