உத்தரகோசமங்கையில் 1 ரூபாய் நாணயம் அளவில் யானை சிற்பம்
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவில் உள்ள யானை சிற்பம் பக்தர்களை கவர்ந்துள்ளது. உத்தர கோசமங்கை மங்களநாதர் கோயிலின் கருவறை மண்டபத்திற்கு வெளிப்புறத்தில் கலைநயமிக்க கற்சிற்பங்கள் ஏராளம் உள்ளன. இவற்றில் ஒரு ரூபாய் நாணயம் அளவிற்கு யானையின் சிற்பம் பக்தர்களை கவர்ந்து வருகிறது. இதை பக்தர்கள் பலர் மெபைல் போனில் படம் பிடித்து செல்கின்றனர். சென்னையைச் சேர்ந்த பக்தர் நமசிவாயம் கூறுகையில்,“ தொன்மையான சிவாலயங்களில் ஒன்றாக உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் திகழ்கிறது. இங்கு கல்லில் செதுக்கப்பட்ட அடுக்கு சங்கிலி, சிங்கத்தின் வாயில் கல் உருண்டை, சப்த ஸ்வர துாண்கள், ஆயிரம் லிங்கம் கொண்ட சகஸ்ரலிங்கம், மிருகமும் பறவையும் கொண்ட சிற்பம், பொதிகை முத்திரை உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான கலைநயமிக்க சிற்ப வேலைபாடுகள் அதிகளவில் உள்ளன. இவற்றில் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவில் தத்ரூபாக செதுக்கப்பட்ட யானை சிற்பம், தமிழர்களின் சிற்ப கலைக்கு எடுத்துகாட்டாக திகழ்கிறது. சுவாமி தரிசனம் முடித்துவிட்டு, பிரகாரம் சுற்றும் போது காணும் சிற்பங்கள், ஓவியங்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக உள்ளது,”என்றார்.