வடமதுரை மாரியம்மன் கோயில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த மார்ச் 4ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.
மார்ச் 12ல் அம்மன் சாட்டுதல், மார்ச் 14 முதல் 18வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மங்கம்மாள்கேணி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு 1:10 மணிக்கு துவங்கியது.
காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர். நேற்று காலை அக்கினிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், கொலு, பொங்கல் வைத்தல் வழிபாடுகள் நடந்தன. இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.