விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பொங்கல் திருவிழா ஏப்.9 ல் நடக்கிறது. நேற்று இரவு 8:01 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழா கமிட்டியினர் முன்னிலையில் யாகம் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. விழாவில் வள்ளி திருமணம் நாடகமும், இரவு 10:00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்ரல் 9 ல் நடக்கிறது. அன்று இரவு 8:01 மணிக்கு மாரியம்மன் கோயிலில் அடுப்பு பூஜையும், தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடக்கிறது. ஏப்.10 ல் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப்.11ல் மாலை 5மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. அடுத்தநாள் காலை 7:00 மணிக்கு தேர் நிலை வந்து சேருதல், ஏப். 13ல் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பொங்கல் திருவிழாவையொட்டி கே.வி.எஸ். மேல்நிலை பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி ஏப்.5 முதல் ஏப்.30 வரை நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.