27 அடி மணிகண்டன் சுவாமிக்கு 1,008 குடம் பால் அபிஷேகம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஆதி அய்யப்பன் கோவிலில், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கு, 1,008 பால் குட அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், க.உண்ணாமுலை பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, ஆதி அய்யப்பன் கோவிலில், 1ம் தேதியான நேற்று முன் தினம் நடை திறக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, அரிபுத்திர சுவாமிகள் தலைமையில், 27 நட்சத்திர யாக குண்ட சாலையில், சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின், மூலவர் ஆதி அய்யப்பன் சிலைக்கும், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு, ஜோதி ஏற்றும் விழா நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, 1,008 பெண்கள் பால் குடம் ஏந்தி, விநாயகர், அம்மன், சன்னிதிகளில் வலம் வந்து, மணிகண்டன் சுவாமி பாதத்தில், பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.