திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் அர்ச்சுனன் தபசு விழா
திருத்தணி: திரவுபதியம்மன் கோவிலில் நடந்து வரும் தீமிதி திருவிழாவில், நேற்று காலை, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி விழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில், நேற்று காலை, கோவில் வளாகத்தில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, 35 அடிக்கு மேல் உயரமுள்ள பனை மரம் நடப்பட்டது. தொடர்ந்து, அர்ச்சுனன் தவ வேடத்தில் பனை மரத்தின் ஒவ்வொரு படிக்கும், ஒரு பாடல் பாடியவாறு ஏறினர். தொடர்ந்து, மரத்தின் உச்சியில் இருந்து அர்ச்சுனன் தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, திரளான பெண்கள் பனை மரத்தின் கீழ் படுத்து, குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற் பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, உற்சவர் திரவுபதியம்மனை வழிபட்டனர். வரும், 9ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறுகிறது.