பரமக்குடி சித்திரை திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. இக்கோயிலில் மதுரை அழகர் கோயிலை போன்று ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடப்பது வழக்கம். இதன் படி அமாவாசையான நேற்று (ஏப்.,26) அதிகாலை 5:30 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் விழா தேவஸ்தான டிரஸ்டிகள்
அகஸ்தியன், நாகநாதன், கங்காதரன், கண்ணன் முன்னிலையில் நடந்தது.கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரம் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து மே 5 ல் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கி, மே 9 இரவு 2 மணிக்கு மேல் பெருமாள், கோடாரி கொண்டையிட்டு கத்தி, வளரி ஏந்தி, தீப்பந்த வெளிச்சத்தில் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். மறுநாள் குதிரை வாகனத்தில் எழுந்தரும் பெருமாளுக்கு ஆயிரக்கணக்கான
பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்கவுள்ளனர். தொடர்ந்து மண்டூக மகரிஷி சாபவிமோசனமும், தசாவதார சேவையும் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.