காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
ADDED :3216 days ago
பல்லடம்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கணபதிபாளையம் காலபைரவர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் உள்ள, வடுகநாத சுவாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதையொட்டி, மாலை, 4.30 மணிக்கு, பன்னீர், சந்தனம், பால், விபூதி, மற்றும் தேன் உள்ளிட்டவைகளால், காலபைரவருக்கு அபிஷேகம் நடந்தது. இரவு, 7.00 மணி முதல், அலங்கார பூஜை செய்யப்பட்ட பின், பக்தர்கள் மூலவருக்கு மலர்களால் அர்ச்சனை செய்தனர். தீபாராதனை முடிந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில், காலபைரவருக்கென உள்ள தனி சன்னதி என்பதால், கணபதிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.