அரூர் காமாட்சியம்மன் திருக்கல்யாண உற்சவம்
அரூர்: அரூரில் காமாட்சியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. அரூரில், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கம் சார்பில், காமாட்சியம்மன், கோட்டை காளியம்மன், உள்ளூர் மாரியம்மன் ஆகிய கோவில்களின், முப்பெரும் விழா நடந்தது. கடந்த, 15ல் துவங்கிய விழாவின் முதல் நாளில், கணபதி ஹோமம், கொடியேற்றம், கங்கணம்
கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த, 16ல் உள்ளூர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சியும், 17ல் மாவிளக்கு ஊர்வலமும், 18ல், 108 தீப்பந்தங்களுடன் பூ மிதிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 19ல் கடைவீதி விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலமாக வந்து காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகமும், தொடர்ந்து, 108 சங்காபிஷேகமும் நடந்தது. நேற்று முன் தினம் காலை, 11:00 மணிக்கு காமாட்சியம்மன், ஈஸ்வரர் திருக்கல்யாண உற்சவமும், இரவு சுவாமி திருவீதி உலாவும் வெகு விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.