ஆரணி மழை வேண்டி ஒப்பாரி வைத்து வழிபாடு
ADDED :3385 days ago
ஆரணி: ஆரணி அருகே, மழை வேண்டி கிராம மக்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில், கடும் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறு, ஏரி, குளம் ஆகியவை வறண்டு, விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால், மழை வேண்டி, அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று மாலை, 3:00 மணிக்கு, அங்குள்ள ஏரிக்கு சென்று, வருண பகவானுக்கு ராகி களி உண்டை, கருவாடு குழம்பு வைத்து படையிலிட்டு வழிபாடு நடத்தினர். பின், மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து பிரார்த்தனை செய்தனர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.