சேலத்தில் இன்று மாரியம்மன் பண்டிகை: ஆயிரக்கணக்கான ஆடுகள், கோழிகள் விற்பனை
சேலம்: சேலத்தில், இன்று நடக்கும் மாரியம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு, நேர்த்திக்கடன், காவு கொடுப்பதற்காக, 5,000 ஆடுகள், 10,000 கோழிகள் விற்பனையாகின. சேலத்தில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் உட்பட, மாநகரில் உள்ள, 88 மாரியம்மன் கோவில்களில், இன்று பொங்கல் விழா நடக்கிறது. சேலம் மாவட்டத்துக்கு, இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு, நேற்று தர்மபுரி மாவட்டம் அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, சேலம் மாவட்டம் ஓமலூர், எம்.செட்டிப்பட்டி, வாழப்பாடி, கருமந்துறை, தாரமங்கலம் ஆகிய இடங்களில் இருந்து, வியாபாரிகள், விவசாயிகள் ஆட்டு கிடாய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சேலம், மணியனூர் ஆட்டு சந்தையில், நேற்று காலை, 1,000 ஆட்டு கிடாய்கள் விற்பனை செய்யப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள், மில்களில், ரத்த காவு கொடுப்பதற்காக, செவ்வாய்ப்பேட்டை, சந்தைப்பேட்டை, லீபஜார் பகுதிகளில், 4,000 ஆட்டு கிடாய்களை வியாபாரிகள் விற்பனைக்கு குவித்து இருந்தனர். இவைகளை செவ்வாய்ப்பேட்டை, லீபஜார் பகுதி வியாபாரிகள், மில் அதிபர்கள் வாங்கிச் சென்றனர். கடந்த வாரம், ஆட்டு கிடாய்கள், உயிருடன் கிலோ, 300 ரூபாய்க்கு விற்றது, நேற்று கிலோ, 340 ரூபாய் முதல், 360 ரூபாய் வரை விற்றன.
10,000 நாட்டு கோழி சேவல்கள் விற்பனை: தொழிலதிபர்கள், வியாபாரிகள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு, ஆடுகளை வாங்கிய நிலையில், நடுத்தர, ஏழை மக்கள், நாட்டுக் கோழி சேவல்களை வாங்கினர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் இருந்து, 10 ஆயிரம் நாட்டுக் கோழி சேவல்கள் திருச்சி மெயின் ரோடு, தாதகாப்பட்டி கேட், அம்மாபேட்டை ஆகிய இடங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு இருந்தன. கடந்த வாரம் வரை, நாட்டுக்கோழி உயிருடன் கிலோ, 280 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று கிலோ, 340 ரூபாய் முதல், 360 ரூபாய் வரை விற்றது. பண்டிகை தினமான இன்று, மீன், பிராய்லர் கறிக் கோழியின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.