உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு வழிபாடு

மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு வழிபாடு

திருவள்ளூர்:மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் கோவில்களில் நேற்று, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜை நடந்தது.விநாயகர் சதுர்த்திக்கு முன், மஹா சங்கடஹர சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டம், பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தம் கிராமத்தில், ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, மஹா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, கணபதிக்கு, காலை, 10:00 மணி முதல் மதியம், 3:00 மணி வரை, சங்கட நிவாரண ஹோமம் நடந்தது. பின், 1,008 மூல மந்திர ஹோமம், ககார சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ அபிஷேகம், ஸ்தபன கலசாபிஷேகம் நடந்தது. மதியம், மகா தீபாராதனை நடந்தது.

திருவள்ளூர் தேவி மீனாட்சி நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் எதிரே அமைந்துள்ள, காரியசித்தி கணபதி கோவில், பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர், தீர்த்தீஸ்வரர் கோவில், ஜெயாநகர் விரிவாக்கம், வல்லப கணபதி கோவில் ஆகிய கோவில்களிலும், சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலின், 11 விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !