நடராஜர் சன்னதி விமானத்தில் செடிகளால் கட்டடத்திற்கு ஆபத்து
ADDED :3046 days ago
காஞ்சிபுரம் : ஏகாம்பரநாதர் கோவில் நடராஜர் சன்னதி விமானத்தின் மேல் பகுதியில் அரச மர செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கட்டடம் விரிசல் ஏற்பட்டு பலவீனமாகி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், மூன்றாம் பிரகாரத்தில் நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இதன் விமானத்தின் மேல் பகுதியில் அரச மர செடிகள் அவ்வப்போது வளர்ந்து கட்டடத்தில் விரிசல் ஏற்படுத்தியுள்ளது. இதனால், சன்னதியின் உள்பகுதியில் உற்சவர் சிலைக்கு பின் பகுதியில் சுவற்றில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விமானத்தின் மேல் பகுதியில் பல இடங்களில் மீண்டும் செடிகள் வளர்ந்து வருவதால், விரிசல் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த சன்னதியை சீரமைத்து பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.