திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்
பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் மூலவர் பெருமாள் திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் அலங்காரத்தில் நெய்தீப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று(அக்.5ல்) புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சம் நடந்தது.பிரம்மோற்சவம் முன்னிட்டு காலை முதல் திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தில் நடைபெறுவது போல் நடந்தது. விழாவையொட்டி காலை 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு தோமாலை சேவை, காலை 7:45க்கு கொடியேற்றம், காலை 8:00 மணிக்கு உற்சவர் பெருமாள் அம்சவாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9:00 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 10:00 மணிக்கு அனுமந்த் வாகனத்திலும், 11:00 மணிக்கு சேஷவாகன சேவையிலும், காலை 12:30 மணிக்கு கருடவாகனத்திலும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 3:00 மணிக்கு யானை வாகன சேவை, 4:00 மணிக்கு சூர்ணோற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.