பழநி கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.20ல் துவக்கம்
ADDED :3253 days ago
பழநி:பழநி முருகன் கோயிலில் வரும் அக்.,20ல் காப்புகட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கி அக்., 26வரை நடக்கிறது. பழநி மலைக்கோயிலில் அக்.,20ல் பகல் 12:௦௦ மணி உச்சிக்கால பூஜையில் மூலவர் தண்டாயுதபாணி, உற்சவர் சின்னக்குமார சுவாமி, சண்முகர், நவவீரர்களுக்கு காப்புக்கட்டுதல் நடக்கிறது. அதே நேரத்தில் பக்தர்களும் தங்கள் கையில் காப்புக்கட்டி, சஷ்டி விரதத்தை துவங்க உள்ளனர். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,25ல் கிரிவீதியில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனால் அன்று மதியம் 2:30 மணிக்கு மலைக் கொழுந்து அம்மனிடம் முருகர்வேல் வாங்கிய உடன் சன்னதி நடை சாத்தப்படும். இரவு 7:௦௦ மணி தங்கரதப்புறப்பாடு கிடையாது. விழாவின் ஏழாம் நாள் (அக்.,26ல்) மலைக் கோயிலில் திருக்கல்யாணம் காலை 10:45மணிக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 8:௦௦ மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.