தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப நெய்: உயர்கிறது கட்டணம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப நெய் காணிக்கை கட்டணத்தை உயர்த்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டு தோறும் நடக்கும் கார்த்திகை தீப திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு தீப திருவிழா, நவ., 23ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச., 2ல், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பரணி தீபமும்; மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன.
இந்த ஆண்டு மஹா தீபம் ஏற்ற, ஆவின் நிர்வாகத்திடமிருந்து, 3,500 கிலோ, முதல் ரக நெய்யை கொள்முதல் செய்ய, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது, ஒரு கிலோ ஆவின் நெய், 411 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பக்தர்களிடம், நெய் காணிக்கையாக, ஒரு கிலோவிற்கு, 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, கோவில் இணை ஆணையர், ஜெகன்நாதன் கூறியதாவது:ஆவின் நிர்வாகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெய், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை கொண்டு பரிசோதித்த பிறகே, மஹா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும். பக்தர்கள் நேரடியாக செலுத்தும் நெய் தரமானதாக இருக்க வேண்டும்; தரமற்ற நெய் அனுமதிக்கப்படாது.
நெய் காணிக்கை : கட்டணம் உயர்த்துவது குறித்து, அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க, அறநிலையத்துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப் படும்.இவ்வாறு அவர் கூறினார்.