கந்தசஷ்டி விரதம் முடித்த பழநி பக்தர்கள்
பழநி, பழநியில் வாழைத்தண்டு, காய்கறி, பழங்களுடன் தயிர் கலந்த கூட்டு நைவேத்யத்துடன் கந்தசஷ்டி விரதத்தை பக்தர்கள் முடித்தனர்.
கந்தசஷ்டி விழாவிற்காக அக்.,20 முதல் காப்பு கட்டிய பக்தர்கள் 6 நாட்களாக விரதமிருந்தனர். விரதத்தை நிறைவு செய்வதற்காக, பழநி மலைக்கோயில், திருஆவினன்குடி கோயில்களில் குழுக்களாக அமர்ந்து, வாழைத்தண்டு, பழங்கள், காய்கறி, தயிர் சேர்த்து நைவேத்ய பிரசாதம் தயாரித்தனர். மலர் அலங்காரத்துடன் தீபம் ஏற்றி வழிபாடு செய்து மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமி, திருஆவினன்குடி குழந்தைவேலாயுத சுவாமிக்கு நைவேத்யம் செய்தபின், விரதம் முடித்து, பிறபக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கேரளா, திருப்பூர், கோவை பக்தர்களும் இதில் பங்கேற்றனர்.
பழநி பக்தர் பெரியநாயகி கூறியதாவது: பல ஆண்டுகளாக கந்த சஷ்டி விரதம் மேற்கொள்கிறேன். ஒருவாரம் கந்தபுராணம், கந்த சஷ்டிக்கவசம் படித்து சூரசம்ஹாரத்தன்று வாழைத்தண்டு நைவேத்யத்துடன் விரதத்தை நிறைவு செய்வோம். சுவாமிக்கு வழக்கமான பொங்கல், புளியோதரை போல இல்லாமல், கந்தசஷ்டி விழாவில் மட்டும்தான் பச்சை காய்கறி, பழங்கள், தயிர் மூலம் நைவேத்ய பிரசாதம் தயாரிக்கிறோம், என்றார்.