பழநியில் ரூ.1.62கோடியில் நவீன முடிகாணிக்கை மண்டபம்
பழநி;பழநி முருகன் கோயிலில் ரூ. ஒரு கோடியே 62 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய முடிகாணிக்கை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பழநி முருகன்கோயிலில் தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். தற்போது சரவணப்பொய்கை, சண்முகா நதி, பாத விநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன், தங்கும்விடுதி உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அதில் கோயில்பங்கு ரூ.4, பிளேடு ரூ.1, நாவிதர் பங்கு ரூ.25 என வழங்கப்படுகிறது. சரவணப் பொய்கை, வடக்கு கிரி வீதி, வின்ச் ஸ்டேஷன் போன்ற இடங்களில் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக் காலங்களில் முடி காணிக்கைக்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக தண்டபாணி நிலைய வளாகத்தில் ரூ.ஒருகோடியே 62லட்சம் செலவில் நவீன குளியல் அறைகள், டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்ட தரைத்தளத்துடன் ஒருங்கிணைந்த முடி காணிக்கை நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது தைப் பூசத்திற்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.