மேலானதை சிந்தியுங்கள்
ஒரு பள்ளியில் கணக்கு தேர்வு முடிந்து விடைத்தாள் கொடுத்தனர். ஒரு மாணவன் பேப்பரை வாங்கியவுடன் அழ ஆரம்பித்து விட்டான். “ஏண்டா அழுகிறாய். நீ தான் கணக்கில் 96 மார்க் வாங்கியிருக்கிறியே! சந்தோஷப் படேன்,” என்றனர் சக மாணவர்கள். “அட போங்கடா! எனக்கு மேலே நான்கு பேர் 97,98,99,100 என வாங்கி விட்டார்களே!” என வருத்தப்பட்டான் அந்த மாணவன். இன்னொரு மாணவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனிடம் சென்ற மாணவர்கள், “டேய்! நீ வாங்கியிருப்பதே நாலு மார்க். இதிலே என்னடா சிரிப்பு?” என்றனர். “அட போங்கடா! எனக்கும் கீழே 3,2,1,0 என நான்கு பேர் மார்க் வாங்கியிருக்கிறார்களே. அவர்களை விட நான் உசத்தி இல்லையா? அதனால் தான் சிரிக்கிறேன்,” என்றான். மாணவர்கள், மேலான விஷயங்கள் பற்றியே சிந்திக்க வேண்டும். முதல் மாணவன் தன் முயற்சியின்மைக்காக அழுகிறான். அடுத்த மாணவன் தன் தோல்வியை மறைக்கசிரிக்கிறான். “மேலானவைகளைத் தேடுங்கள்,” என்கிறது பைபிள். நம் புத்தி தலைகீழாக சிந்திக்கக் கூடாது. முன்னேற்றம் குறித்தே சிந்திக்க வேண்டும்!