உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் மாசிபெரு விழா கடந்த மாதம் 14ம்தேதி மகா சிவராத்திரியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. 5ம்நாள் விழாவாக நேற்று மாலை, தீமிதி திருவிழா நடந்தது. மாலை 3.00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மனுடன், காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். 4.00 மணிக்கு, சேலம் மாவட்டம் ஒட்டம்பட்டி சக்தி பீடம் பரமகுரு ஆதினம் முதலில் தீக்குண்டம் இறங்கினார்.

தொடர்ந்து கோவில் பூசாரிகளும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். இந்து சம ய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவிஆணையர் பிரகாஷ்,அறங்காவலர் குழு தலைவர் ரமேஷ், அறங்காவலர்கள் ஏழுமலை, கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்துகழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழுப்புரம் எஸ்.பி.,ஜெயக்குமார் மேற்பார்வையில் செஞ்சி டி.எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய திருவிழாவான தேரோட்டம்  நாளை (20ம் தேதி) மலை 5.00 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !