பென்னலூர் சிவன் கோவில் புதுப்பிக்கும் பணி தீவிரம்
பென்னலுார்:பென்னலுார் சிவன் கோவில் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த பென்னலுார் கிராமத்தில், ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில், பராமரிப்பு இன்றி, சிதிலமடைந்து இருந்தது. கோவில் கோபுரம் இடிந்தும், முள் மரங்கள் வளர்ந்து, புதர் மண்டி காணப்பட்டது. பென்னலுார் கிராமத்தை சேர்ந்த சிவ பக்தர்கள் சிலர், கோவிலின் உள்ளே செல்வதற்கு வழி ஏற்படுத்தி, சிவனை வழிப்பட்டு வந்தனர்.அதன் பின், இந்த கோவில் குறித்த தகவல் அறிந்த, பிற பகுதிகளை சேர்ந்த சிவ தொண்டர்கள், கோவிலை சீரமைக்க முடிவு செய்தனர். கடந்த, 2016ல், நன்கொடையாளர்கள் உதவியுடன், கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி துவங்கியது.இதற்காக கோவிலில் இருந்து அகற்றப்பட்ட, கற்களின் மீது வரிசை எண்கள் எழுதி பத்திரப்படுத்தப்பட்டன.பின், இந்த கற்களை, இருந்த இடத்திலேயே மீண்டும் வைத்து, கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.