மாரியம்மன் கோவில் திருவிழாவில் அக்னிசட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2948 days ago
கிருஷ்ணராயபுரம்: பாப்பகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு, பக்தர்கள் அலகு குத்தி, அக்னிசட்டி ஏந்தி ஊர்வலம் சென்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பாப்பகாப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பக்தர்கள் நேற்று முன்தினம் குளித்தலையில் இருந்து பால்குடம் எடுத்து வந்தனர். நேற்று அதிகாலை மாரியம்மன் கரகம்பாலிக்கப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரம் செய்து கோவிலில் வைக்கப்பட்டது. சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அக்னிசட்டி எடுத்தனர். பலவித அலகு குத்தி ஊர்வலம் சென்றனர். திருவிழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர்.