மாவடு மாலவன்!
மாவடு மூத்தவன் மாவடு யாதவன்
மாவடு மன்னவன் மாவடு மாலவன்
மாவடு மாலவன் மார்பினில் மாவடு
மாவடு சென்றனன் மாநிலம் வாங்கிட
மாவடு மூடினன் மாவடி தாயவே
மாவடு வாகுமோ மாநிலம் காத்தலே
இந்த பாடலைக் கவனித்தீர்களா? ஒரேசொல் பலமுறை வந்தாலும், வெவ்வேறு பொருளை ஏற்றுள்ளது. கீழ்க்காணும் விளக்கத்தைக் கண்டால், இந்தப் பாடலின் சிறப்பை அறியலாம். மாவடு மூத்தவன் - விலங்கினமான கஜேந்திரனால் அழைக்கப்பட்ட ஆதிமூலம்
மாவடுயாதவன் - கேசி எனும் குதிரையால் தாக்கப்பட்ட கண்ணன்.
மாவடு மன்னவன் - விலங்கினமான மானை துரத்திச் சென்ற ராமன்
மாவடு மாலவன் - லட்சுமிதேவியால் அணுகப்பட்ட விஷ்ணு.
மாவடு மாலவன் மார்பினில் மாவடு - லட்சுமி வந்தமர்ந்ததால் விஷ்ணுவின் அடையாளமாக ஏற்பட்டது ஸ்ரீவத்ஸம் எனும் மறு.
மாவடு சென்றனன் - பெரிய பிரம்மச்சாரி வாமனன்.
மாநிலம் வாங்கிட - உலகை மாவலியிடம் திரும்பப்பெற
மாவடு மூடினன் - தன் உண்மை ஸ்வரூபத்தை மறைக்க, ஸ்ரீவத்ஸத்தை மான் தோலால் மறைத்தது.
மாவடி தாயவே - பெருவடிகளால் உலகை அளக்கவே அல்லவா?
மாநிலம் காத்தலே - உலகத்தைக் காத்தல்.
மாவடு வாகுமோ - ஒரு பெருங்குற்றம் ஆகுமோ?