டவுன் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
ADDED :2763 days ago
திருப்பூர் : திருப்பூர், டவுன் மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழாவில், பூவோடு ஊர்வலம் நடந்தது. திருப்பூர், பழைய மார்க்கெட் வீதியில் உள்ள டவுன் மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில், பொங்கல், பூச்சாட்டு விழா, கடந்த, 17ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு, நொய்யல் ஆற்றிலிருந்து, மேளதாளங்கள், வாண வேடிக்கை முழங்க, கம்பம் மற்றும் கும்பம் ஆகியவை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று, அம்மன் அழைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இரவு, செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் ஊர்வலமாக பூவோடு எடுத்து வந்தனர். நேற்று, பட்டத்தரசி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளினார். இன்று, காலை, பொங்கல் விழா நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டும், அன்னதானமும் நடக்கிறது.