திருச்சானுார் பத்மாவதி தாயார் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு
ADDED :2759 days ago
திருப்பதி: திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில், வசந்தோற்சவத்தை முன்னிட்டு, நேற்று தங்கத் தேர் புறப்பாடு நடந்தது. ஆந்திர மாநிலம், திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில், கோடை வெயிலின் வெப்பத்தை தவிர்க்க, வருடாந்திர வசந்தோற்சவத்தை, தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் முதல், திருச்சானுாரில் வருடாந்திர வசந்தோற்சவம் விமரிசையாக துவங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை, பத்மாவதி தாயார், தங்கத் தேரில் மாடவீதியில் எழுந்தருளினார். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத் தேரை, பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். அதன் பின், வசந்த மண்டபத்தில், தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. இதில், தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். இன்றுடன், திருச்சானுாரில் நடந்து வரும் வருடாந்திர வசந்தோற்சவம் முடிவடைகிறது.