இரண்டு நாட்களில் 12 கோடி முறை நமசிவாய மந்திரம் உச்சாடனம்
கரூர்: பஞ்சாட்சர மந்திர உச்சாடன, பெருவேள்வியில், கடந்த இரண்டு நாட்களில், 12 கோடிக்கும் அதிகமான முறை நமசிவாய மந்திரத்தை பக்தர்கள் உச்சரித்துள்ளனர். கரூர், கல்யாண பசுபதீஸ்வர் கோவிலில், 100 கோடி முறை நமசிவாய மந்திரம் உச்சாடனம் செய்யும் பெருவேள்வி கடந்த, 1ல் துவங்கியது. வரும், 10 வரை நடக்கும் வேள்வியில், சிவனடியார்கள், பக்தர்கள் தினமும் காலை, 6:00 முதல், இரவு, 9:00 மணி வரை, நமசிவாய மந்திரம் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோவில் வளாகத்தில் பக்தர்கள் அமர, கொட்டகை போடப்பட்டுள்ளது. மந்திரத்தை பதிவு செய்ய, சிறிய வடிவிலான கவுன்டிங் மிஷின் வழங்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 10:30 மணி வரை கடந்த இரண்டு நாட்களில், 12 கோடியே, ஒன்பது லட்சத்து, 88 ஆயிரத்து, 345 முறை நமசிவாய மந்திரம் உச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள எட்டு நாட்களில், 100 கோடி இலக்கை அடைய முடியும் என, வேள்வி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.