வேலூரில் மாயமான சுவாமி சிலை பென்னாகரத்தில் கண்டெடுப்பு
ADDED :2826 days ago
பென்னாகரம்: வேலூர் மாவட்டத்தில், மாயமான அம்மன் சிலை, தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே, விவசாய நிலத்தில், நேற்று மீட்கப்பட்டது. வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அடுத்த, சாந்தம்பாக்கம் கிராமத்தில் பழமையான பஜனை கோவில் உள்ளது. இங்கிருந்த, ஒன்றறை அடி உயரமும், 17.450 கிலோ கிராம் எடையுமுள்ள, உலோகத்தாலான படவேட்டம்மன் சிலை, கடந்த, 2017 டிசம்பரில் மாயமானது. புகார்படி, ராணிப்பேட்டை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, அரகாசன அள்ளிக்கு உட்பட்ட எர்ரப்பட்டியை சேர்ந்த பூபதி என்பவரது விவசாய நிலத்தில் சிலை உள்ளதாக, கிராம நிர்வாக அலுவலர் சுகுமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிலையை மீட்ட அவர், பென்னாகரம் தாசில்தார் அழகுசுந்தரத்திடம் ஒப்படைத்தார். ராணிப்பேட்டை போலீசார், சிலையை மீட்டு சென்றனர்.